Friday, 20 January 2012

என் இனிய முகம் பாரா நண்பனே

என் இனிய முகம் பாரா நண்பனே - வாழ்க்கை கவிதை


எங்கோ இருந்து பேசுகிறாய்
என் உள உணர்வுகளை தட்டி எழுப்புகிறாய்

பண்டே பழகி இருந்தது போல்
பாசம் என் மீது காட்டுகிறாய்

வண்டாய் பல காத தொலை கானத்திருந்து
வந்து கமல மது உண்வது போல்

செண்டாய் மணம் வீசும் மனம் கொண்டாய்
வண்டாய் மனதில் ரீங்காரம் இடுகிறாய்

தொலைவில் நீ தந்த பாச மழை
துளிர்த்து என் மனதை தேற்றியது

உன் காற்றலையை சுமந்து வந்த கைப்பேசி
இன்று சுகமான சுமையாய் போனது

என் மன வயலில்
நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்த சிறு முளைதான்
ஆயினும் ஆல விருட்சம் போல்
ஆழ்ந்து நின்றது உன் நட்பு

நாடி வந்த நட்பின் பால்
நயந்து கேட்டாய் கவிதை ஒன்று
தலையங்கமும் தந்து விட்டாய்
தயக்கமின்றி நான் எழுத

காதலும் காமமும் ஓர் இனமே
இரு மனங்கள் சேரத் துடிப்பது காதல்
இரு உணர்வுகள் பகிரத் துடிப்பது காமம்
பூத்த காதல் காமமாய் கனியலாம்
நேர்ந்த உறவுகளில் உளங்கள் பிணைந்தால்

- வை.அமுதா

தடைகளை மீறி வந்திடுவீர் .........!!!!


தடைகளை மீறி வந்திடுவீர் .........!!!! - வாழ்க்கை கவிதை

வலிமை கொண்ட காற்றே
வண்மைக் கொண்ட காட்டாறே
தடைகள் ஏதும் உனக்கில்லை
தடுக்கவும் எவரால் முடியவில்லை
உன் சீற்றம் கண்டு அஞ்சுகிறார்
சினத்தை கண்டு ஒஞ்சுகிறார்
இயற்கையில் வரும் மாற்றங்கள்
இயல்பானவை என ஏற்கின்றார்
இடையூறுகள் அதில் இருப்பினும்
இயற்கையின் நியதி என்கின்றார்

மங்கையின் மனமும் புதுப் புனல் தான்
வேகத் தடை போட்டு பயனேதும் இல்லை
தன்னம்பிக்கை கொண்டு தடைகளை மீறி
களிறு நடை போடும் புதுமைப் பெண்ணை
வேலி தாண்டிய வெள்ளாடு என
அடையாளம் காட்டிடாதீர்

மாற்றம் என்பது மானிட தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவீர்
தனக்கென ஒரு தனி பாதை வகுக்கும்
பெண்ணின் உள்ள உணர்வுகள்
இயற்கையில் நிகழும் இயல்பான மாற்றமே
சாஸ்த்திரங்கள் சம்பிரதாயங்கள்
சமூகக் கட்டுப் பாடுகள் என
இருட்டறைக்குள் தள்ளிடாதீர்
வேலியிட்டு முடக்காதீர்
வெந்தணலில் வீசாதீர்

நீண்ட வான்வெளியை மடக்கிட முடிவதில்லை
ஓயாத அலைக்கு ஆணையிட எவருமில்லை
தனித்துவம் காட்டிட பெண்ணினமே
தடைகளை மீறி வந்துவிடு
தன்னம்பிக்கையுடன் போராடு
மனதில் கொண்ட எண்ணங்களை
நன உலகில் புதியதாய் சமைத்துவிடு !!

மலரின் துயரம் ......

மலரின் துயரம் ...... - வாழ்க்கை கவிதை


இரவு முழுதும் இலைகளுக்குள் உறக்கம்
இதழ்களை சிலிர்த்து உறக்கம் கலைத்தேன்

பகலவன் காலடி கேட்கும் முன்னே
பனித்துளியில் தலை நனைத்தேன்

கண்சிமிட்டி குவலயம் நோக்கினேன்
பனிக் காற்று என்னை சீண்டிச் சென்றது

இருள் மறைந்து ஒளி நிறைந்தது
மொட்டவிழ்ந்து மலரானேன்

தலைவன் பார்வை பட்டவுடன்
நாணத்தில் கவிழ்ந்த மங்கைப் போல்

கதிரவன் மோகப் பார்வையிலே
தலை சாய்த்து மண் நோக்கினேன்

மாலை மங்கை தோழமையில்
மணம் வீசி உளம் குளிர்ந்தேன்

எனை காதலில் வாட்டிய இளங்கதிரோன்
கடல் மங்கை மடி சாய்ந்தான்

தாளவொன்னா துயரத்தில்
தளர்ந்து உலர்ந்து மண் மடி சேர்ந்தேன் !